Wednesday, March 31, 2010

சமச்சீர்க்கல்வி – கருத்தியல் சார்ந்த எதிர்பார்ப்புகள்

கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட சமச்சீர்க்கல்வி அறிக்கையின்படி பள்ளிக்கல்வியில் தமிழ்வழி/ஆங்கிலவழி மணவர் விகிதம் 80:20 என்று உள்ளது....
ஆங்கிலவழிப் பள்ளிகளின் பெருக்கம் இனியும் தொடர்ந்தால்... இதுவே 20:80 ஆகி.. 100:0-ஐ நோக்கிச்சென்றுவிடும் ஆபத்துள்ளது!

சமச்சீர்க்கல்வி அமலாக்கத்திற்கு அழுத்தம் தரும் அதே சமயத்தில், இடைக்கால நடவடிக்கையாக ஆங்கிலவழி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் விழுக்காட்டிற்கு ஒரு உச்சவரம்பு நிர்ணயித்து தனியார்/அரசுப் பள்ளிகட்கு அவசர ஆணை/சட்டம் பிறப்பித்திட அரசினரை நெருக்கிட வேண்டும். (ஏற்கனவே, அரசுதவிப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகளின் எண்ணிகையானது, தமிழ்வழி வகுப்புகளின் எண்ணிக்கைக்கு மிகாமல் இருக்க நடப்பு கல்வியாண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நாளிதழ் செய்திகள் கூறுகின்றன. அதாவது, அரசுதவிப் பள்ளிகளில் இப்போதைக்கு 50க்கு 50க்கு என தமிழ்/ஆங்கில வழி வகுப்புகள்..!)     

அண்மை நாளிதழ் செய்திப்படி.. ஒரே பாடத்திட்டமுறையை செயலாக்கும் சமச்சீர்க்கல்வி வந்தால் விரும்பிய பாடத்திட்டத்தை தெரிவு செய்யும் பெற்றோர்களின்/மாணவர்களின் உரிமை போய்விடுமே என்று ஓலமிட்டவர்கள் (பின்னணியில் கொள்ளைவிலை பாடநூல்கள் விற்கும் தனியார் பதிப்பகங்கள்?), இப்போது அதனைக் கைவிட்டு “சமச்சீர்க்கல்வி விசயத்தில் பயிற்றுமொழியைச் சம்பந்தப்படுத்தி  குழப்பக்கூடாது என்று புதுப்பாட்டு பாடத்தொடங்கியிருக்கிறார்கள்.

சமச்சீர்க்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டால் “ஒரே பாடத்திட்டம் மட்டும் அமலாக்கப்பட்டு, சாதுரியமாக, “ஒரே பயிற்றுமொழி கொள்கை கழற்றிவிடப்படும் வாய்ப்புள்ளது  (ஏனெனில், கல்வி வணிகர்களுக்கு காசு பறிக்க ஆங்கிலவழி எனும் கவர்ச்சி அம்சமாவது  தேவைப்படுகிறது!..

மேலும், உலகமயம் மற்றும் உலகொன்றிய பார்வை (cosmopolitan view) குறித்து பேசும் அறிவுஜீவிகளும் ஆங்கிலவழியை இழுத்துப்பிடிக்கும் நிலையும் உள்ளது!)..
மேலும், சமச்சீர்க்கல்வி அறிக்கையில், மொழிச்சிறுபான்மையர் (தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன்) தம் தாய்மொழியைக் கற்க அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பு, மும்மொழித்திட்டத்திற்கு கம்பளம் விரித்திட வாய்ப்பாகக்கூடாது என்ற கவலையும் உள்ளது!
நம்முன் உள்ள வெட்கிட வைக்கும் வினாக்கள்...

தம்மவர்க்கு மட்டும் தமிழ்ப் பெயரைச்சூட்டிக்கொண்டால் மட்டும் போதுமா?.

நம்மில் எத்துணை பேர்......

-இல்லங்களுக்கும் நிறுவனங்களுக்கும் தமிழில் பெயரிட்டிருக்கிறோம்?

-சூட்டிய தமிழ்ப் பெயரை மொழிபெயர்க்காமல் உள்ளபடியே ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறோமா?

நிறுவனங்களின் பெயர்ப்பலகை / ஊழியர்களின் அடையாள அட்டை / வருகைப் பதிவேடு மற்றும் அன்றாட கணக்குப்பதிவுகளை தமிழில் பேணுகிறோமா?

நிறுவன நிர்வாகம்-ஊழியர்கள் / நிர்வாகம்-நுகர்வோர்கள்... இவர்களுக்கிடையேயான தரவு/தகவல் பரிமாற்றத்தொடர்புகளை தமிழில் மேற்கொள்கிறோமா?

…………..மொத்தத்தில், ஒரு நிறுவனம், அயலகம்/அயலவர் வணிகத்தொடர்புக்கு மட்டும் ஆங்கிலத்தை பயன்படுத்தும் வகையில் அதாவது, புறத்தொடர்பு தமிழ் ஆவணங்களை மொழிபெயர்க்கும் பணியோடு மட்டும் நிற்கும் கோப்பினுள் மட்டும் இருக்கும் உள்ளுறை மொழி(Latent language)யாக மட்டுமே ஆங்கிலம் இருக்கட்டும்!.
-----அகமத் கனி

Monday, March 22, 2010

தமிழ் எழுத்துச் சீர்மை

01. 1930களிலேயே பெரியாரால் வலியுறுத்தப்பட்ட தமிழ் எழுத்துச்சீர்திருத்தம், 1978ல் நடைமுறைப்படுத்தபட்ட முதற்கட்ட நடவடிக்கையோடு நின்றுபோய்விட்டது.

1989-ல் வா.செ.குழந்தைசாமி குழு பரிந்துரைத்த அறிக்கை, கிடப்பில் போடப்பட்டுவிட்டது..

அது உகர, ஊகார குறியீடுகளில் சீர்மை பற்றி மட்டுமே பரிந்துரைத்தது.

இதன் புதிய 2 குறியீடுகளை மட்டும் ஏற்று, நடைமுறைப்படுத்தி தமிழ் வரிவடிவங்களின் எண்ணிக்கையை வெறும் 39 ஆகக் குறைக்க முடியும்.... யாரும் வலியுறுத்தக் காணோம்!

மேலும், எழுத்துச்சீர்மையின் நன்மைகளாக...

01. குழந்தைகள் எளிதாக எழுத்துகளைக் கற்கலாம்.

02. தமிழுக்குப் புதியவர்கள் விரைவாகக் கற்கலாம்.....................................

என்று மட்டுமே அறிகிறோம். இவற்றோடு கூட,

03. குறியீட்டுச்சீர்மை, விரைவான வாசிப்புக்கு உதவும்.

04. குறியீட்டுகளின் சீர்மை மற்றும் எளிமை, பிற மொழியினரும் தாமே எழுத்துக்கூட்டி தமிழைக் கற்க தூண்டும்.

இம்முயற்சியில், விடுதலை நாளிதழ் அன்றாடம் ஒருபத்தியை, நடப்பு வடிவத்திலும் அதன் கீழே சீர்திருத்த எழுத்துவடிவத்திலும் வெளியிட்டு வருகிறது...

-----அகமத் கனி

சொல் வங்கி

01. அறிவியல்/ஆட்சி/நீதித்துறைகளுக்கான கலைச்சொற்களுக்காக இணைய வழியில் அணுகத்தக்க வகையில் சொல்வங்கி அமைத்திட வேண்டும். இதன் மூலம் அகராதிகள்/கலைக்களஞ்சியங்களை வாங்கும் வழிவகைகளையும் (Hyperlink மூலம்) அளிக்கலாம்...

பெரும்பாலும் வாசகர்களின்/ஆர்வலர்களின்/அறிஞர்களின் சொல்லாக்கங்களைத் தரப்படுத்தி பதிவேற்றலாம்.

ஏனெனில், பல ஆண்டுகளுக்கு முன் ராணி வாரயிதழ் வாசகர்களின் பங்கேற்பு/பங்களிப்பு மூலம் அன்றாட வாழ்வில் பயன்படும்

கருவிகள்/உதிரிபாகங்கட்கான எண்ணிறந்த கலைச்சொற்களை வெளியிட்டது... அதே உத்தியை “சொல் வங்கிஉருவாக்கலுக்கும்

பயன்படுத்தலாம்... ராணியின் பங்களிப்பையும் உள்வாங்கிக் கொள்ளலாம்.

-----அகமத் கனி



Monday, March 15, 2010

கணினி மற்றும் கல்வி

01. தமிழுக்கு ல/ழ/ள இருக்கும்போது ஒரு ”ல” தான் என தன்னிச்சையாக, மைய அரசு Unicode Consortium”த்திடம் கூறி எதச்சதிகாரமாய் நடந்துகொண்டது. அதனால் இணையத்தில் தமிழ் எழுத்துகள் விரைவாக பதிவிறக்கம் ஆவதில்லை... இதனால் த.நா. அரசே Unicode Consortium-ல் தன்னை உறுப்பினராக்கிக் கொண்டுள்ளது... கூடுதல் இடங்கள் கோரி போராடுகிறது... தமிழர்கள்/விற்பன்னர்கள் தொடர்ந்து அழுத்தம் தரவேண்டும்.

02. கணினி/இணையப் பயன்பாடு பெருகி, காகிதப் பயன்பாடு அருகி வரும் இக்காலகட்டத்தில் இணைய மையங்களில் ஆங்கிலப் பயன்பாடு மட்டுமே இருக்கிறது.. சொந்தமாக கணினி வைத்திருக்காத ஒருவர் – தமிழில் ஆவணங்கள் தயாரிக்கவோ, மின்னஞ்சல் அனுப்பவோ தடுமாற வேண்டியுள்ளது. அல்லது பயன்படுத்த வாய்ப்பில்லமலேயே திரும்பிவிட நேரிடுகிறது.
இதனால், ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்தி தங்கள் வேலையை முடித்துக் கொள்கின்றனர்.!
ஏனெனில், அங்கு தமிழில் தட்டச்சு செய்வதற்குரிய மென்பொருள் நிறுவப்பட்டிருக்கவில்லை. எனவே இணைய மையங்களில் தமிழில் தட்டச்சு செய்ய உரிய மென்பொருள் நிறுவப்பட வேண்டும். தமிழ் எழுத்துகள் பொறித்த (Tamil 99) ஆங்கில விசைப்பலகைகள் குறைந்தது பாதி எண்ணிக்கையிலாவது அமைத்திட வேண்டும்.


03. கணினித் தமிழுக்காக கணித்தமிழர்கள் அரும்பாடுபட்டு
ஆராய்ந்து உருவாக்கிய அரசு அங்கீகாரம் பெற்ற விசைப்பலகை
Tamil99தான்! அதன் மூலம் ஆங்கிலவழித் தட்டச்சை விட விரைவாக
உள்ளிட முடியும். ஏனெனில், அதில் தமிழ் எழுத்துகளுக்கு
மாற்று (shift key) விசையை ஒருபோதும் பயன்படுத்த
வேண்டியதில்லை.
எனவே இம்முறையே நிலைபெற்றிட – கணினித்தமிழில் கவனம்
செலுத்திட பள்ளிகளில் எட்டாம் வகுப்பிலேயே தமிழ்99 தட்டச்சுப்
பயிற்சி,
ஆங்கிலத் தட்டச்சுப் பயிற்சிக்கு முன்னரே அளிக்கப்படவேண்டும்
(முதலிலேயே ஆங்கிலத் தட்டச்சுப் பயிற்சி கொடுத்தால்,
ஆங்கிலவழித் தமிழ் தட்டச்சுக்கு மாறி விடுவர்.!). Tamil 99 தட்டச்சுப்
பயிற்சியில் இயல்பான – சராசரி வேகம் கிட்டிட ஒருவாரப்
பயிற்சியே போதுமானது! – இதை கல்வித்துறையினரே செய்திட
வேண்டும்... தமிழார்வலர்களும் பரப்பிட வேண்டும்!

04. இன்றைக்கு ஒருவருக்கு ஒரு கணினி என்றில்லாவிட்டாலும், ஒருவருக்கு ஒரு கைப்பேசி என்றாகிவிட்டது. கணினிச் செயல்பாடுகளும் கைப்பேசியில் இடம்பெறத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் கைப்பேசிவழி தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை – சில நிறுவனங்கள் அளித்தபோதும் – நாம் அக்கறை


காட்டாமல் ஆங்கிலத்திலும், ஆங்கிலவழித்தட்டச்சு மூலம் தமிழிலும் பயன்படுத்துகிறோம்.
அஞ்சல்முறை தீவிரமாயிருந்த காலத்தில் நாம் வாழ்த்துஅட்டைகள், பரிசுப்போட்டி படிவங்கள் – இவற்றிலாவது எழுத்துத் தமிழை பயன்படுத்தினோம். கைப்பேசி வந்தபின் இதுகூட அற்றுப்போய்விட்டது...
ஆகவேதான் - தமிழில் குறுஞ்செய்தி மற்றும் அறிவிப்பு விடல் – பெருகிட வேண்டும்.
மேலும், விரைவான உள்ளிடலுக்கு (ஆங்கிலம், இந்திக்கு வழங்கப்பட்டுள்ளதை போல) T9 (Dictionary Facility) வசதியை – கைப்பேசி தயாரிப்பாளரிடம் தமிழுக்கும் கோரிப்பெற வேண்டும். இன்றைக்கு அரியானாவில் அரசினரே வேளாண்மை/வானிலைக் குறிப்புகளை உழவர்களின் கைப்பேசி எண்களுக்கு இந்தியில் குறுஞ்செய்தி மூலம் அனுப்பிவிடுகிறது.... இதனை நம் மாநில அரசு கவனத்திற் கொள்ளவேண்டும்.

05. அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி காரணமாக எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்க அரசு திட்டம் (கல்வி அமைச்சர். நாளிதழ் செய்தி 20.12.08)... எனில், முதல் வகுப்பிலிருந்து தொடங்கும் ஆங்கிலப்பயிற்சி எல்.கே.ஜி.யிலிருந்தா? அந்த கொடுமை நிகழக்கூடாது

-----அகமத் கனி

மரபு சீர்கேடு/சீராக்கல்

01. வானொலியில் ஆகாஷ்வாணி, சிறீ, சிறீமதி என்பதெல்லாம் போய்விட்டாலும்.. சகவருஷம் குறிப்பிடுவதும், கோடை/சம்பா போன்ற பயிர்ப்பட்டங்களைத் தவிர்த்து காரிப்/ராபி போன்ற வடபெயர் வழங்கி வருவதும் தமிழர் வாழ்க்கை/பண்பாட்டு மரபை மறக்கவைத்து சிதைப்பதாகும்.

02. அரசினர் தி.ஆ.வை நடைமுறைப்படுத்திய பின் ஏன் தொடர்ச்சியற்ற 60ஆண்டு முறையை இன்னும் குறிப்பிட வேண்டும்? 60ஆண்டு முறைக்குப்பதிலாகத்தானே தி.ஆ.!

03. அரசினர்/தனியார் வழங்கிடும் பண்டிகைக்கால போனசை பொங்கலுக்கு என வழங்கி பொங்கல் ஒன்றே தமிழரின் முழுமுதல் திருநாள் (பண்டிகை) என முதன்மைப் படுத்தவேண்டும்.


-----அகமத் கனி

Thursday, March 4, 2010

மாவீரர் கேணல் கிட்டு

“கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக தளபதியாக எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனிதப் பாசத்திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப் பற்றுணர்வில் ஒன்றித்துப் போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்து கொண்ட அனுபவத்தில் ஒருவரையயாருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில் வளர்ந்த நேயம் அது.”
- தமிழீழத் தேசியத் தலைவர்.

1979இன் தொடக்கக் காலப் பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித் தளமிட்ட காலம். இக்காலகட்டத்தில்தான் கிட்டு விடுதலைப் போராளியாக வளர்ச்சி பெற்றார். இவரின் இயற்பெயர் சதாசிவம் கிருஷ்ணகுமார். வெங்கிட்டு என்பது இயக்கப் பெயர். பின்னாளில் தமிழீழ மக்களால் கிட்டு என்று செல்லமாக அழைக்கப்பட்டார். கிட்டு தலைவர் பிரபாகரனிடம் நேரடியாகப் போரியலைக் கற்றார். கிட்டு வேகமும் விவேகமும் உள்ள துடிப்புமிக்க இளைஞர்.

1983 மார்ச் 04 அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று சென்றது. அதில் கிட்டுவும் ஒருவர்.

வீதியில் நிலக்கண்ணி வெடிகளைப் பொருத்திவிட்டுப் பகைவனின் வரவை எதிர்பார்த்துக் காத்துள்ளனர். சிங்களப் படை வண்டிகள் வருகின்றன. அவை நெருங்கும் நேரத்தில் ஆட்டுக்குட்டி ஒன்று எதிர்பாராமல் ஓடிவந்து கண்ணிவெடியை மிதித்து வெடிக்கச் செய்து விடுகிறது. வெடித்த மறுகணமே சிங்களப் படையினர் கண்மூடித்தனமாகச் சுடுகின்றனர். பின்வாங்குவது தவிர வேறு வழியில்லை. கிட்டு களநிலை பாதகத்தைக் கருத்திற் கொள்ளாது துணிந்து நின்று தாம் வைத்திருந்த பு 3 (G 3) துமுக்கியால் படைக் கவச வண்டியைச் சுடுகிறார். சிங்களப் படை செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராகிறார் கிட்டு.

1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிக்கு இரண்டாவது பொறுப்பாளராகக் கிட்டு அமர்த்தப் பட்டார். 1983ஆம் ஆண்டு இறுதியில் பயிற்சிக்கென இந்தியா வந்தார்.

1984இல் பயிற்சியை முடித்துத் தமிழீழம் திரும்பிய கிட்டு, குருநகர் படைமுகாம் தாக்குதல் உட்படப் பல தாக்குதல்களில் முதன்மைப் பங்கு வகித்தார்.

1985 சனவரி 09இல் தளபதி கேப்டன் பண்டிதர் வீரச் சாவடைந்தார். அவர் இடத்திற்குக் கிட்டு அமர்த்தப்பட்டார். கிட்டு யாழ் மாவட்டத் தளபதியானவுடன் யாழ் காவல் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடத்தி அங்கிருந்த பெருந்தொகையையும் படைக் கருவிகளையும் கைப்பற்றினார். யாழ் மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றித் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப் படை யாழ் மண்ணில் அதன் முகாமுக்குள்¼ளயே முடக்கப்பட்டது. கிட்டுவின் பெயரைக் கேட்டாலே சிங்களப் படை கதிகலங்கிப் போகும். தமிழீழம் முழுவதும் கிட்டுவின் புகழ் பரவியது. மக்களின் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் கிட்டு அக்கறை காட்டினார். நூலகம், தொழில் நிலையங்கள் மலிவு விலைக் கடைகள் எனப் பலவற்றை மக்களின் நலன் கருதி நிறுவினார். அவரின் சமூகப் பணிகள் இவ்வாறு விரிவடைந்து கொண்டேயிருந்தன.

1987 மார்ச்சு இறுதியில் துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலில் தமது காலை இழந்தார் கிட்டு. ஆனால் மன உறுதியை இழக்கவில்லை. மருத்துவத் திற்காக இந்தியா வந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போதாமைகளை இந்தியாவில் இருந்தபடியே எழுதி வெளியிட்டார். இதனால் இந்திய அரசு அவரை வீட்டுக் காவலிலும் பின்பு சென்னை நடுவண் சிறையிலும் அடைத்தது. சிறையில் இருந்தபடியே ‘தேவி’ இதழுக்குப் போராட்டம் தொடர்பான தொடர் கட்டுரைகளை எழுதினார். தம்மை விடுவிக்குமாறு சிறைக்குள் பல அறப் போராட்டங்களை நடத்தினார். இறுதியில் இந்திய அரசு அவரை விடுதலை செய்து தமிழீழத்துக்கு அனுப்பி வைத்தது.

1989ஆம் ஆண்டு சிங்கள அரசுடன் பேச கொழும்பு சென்ற குழுவில் கிட்டுவும் இடம் பெற்றார். அவ்வாண்டே அவர் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டு இலண்டனுக்குப் பயண மானார். புலம் பெயர் தமிழர்களுக்குப் போராட்ட உணர்வையும், நம்பிக்கை யையும் ஊட்டினார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு, விடுதலைப் புலிகள் கலைப் பண்பாட்டுக் கழகம் எனப் பல்வேறு அமைப்புகளை வெளிநாடுகளில் அமைத்துச் செயல்பட்டார். ஈழ மண்ணைக் கிட்டு மிகவும் நேசித்தார். விரைந்து தாயகம் திரும்பவே விரும்பினார்.

1993 சனவரி 7இல் கிட்டுவும் 9 புலி வீரர்களும் எம்.வி. யகதா என்ற கப்பல் மூலம் இந்தோனேசியாவிலிருந்து தமிழீழம் நோக்கிப் புறப்பட்டனர். 1993 சனவரி 13இல் இந்தியக் கடல் எல்லைக்கு அருகில் உள்ள பன்னாட்டுக் கடற்பரப்பை வந்தடைந்தனர். இவர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்த இந்தியக் கடற்படை அவர்களை மறித்துச் சரணடையும் படி எச்சரித்தது. 16ஆம் நாள் காலை 6 மணி வரை கெடு விதிப்பதாகவும் அதற்குள் கிட்டுவும் மற்றவர்களும் சரணடைய வேண்டும், இல்லையயனில் அதிரடிப் படை அவர்களைத் தாக்கிச் சிறை பிடிக்கும் என்றும் எச்சரித்தனர்.

16 காலை சரியாக 6 மணிக்கு இரண்டு உலங்கு வானூர்திகளும் மூன்று போர் விமானங்களும் கிட்டுவின் கப்பலைச் சுற்றி வட்டமிடுகின்றன. கப்பலின் மேல் தளத்தில் தளபதி கிட்டு நின்ற வண்ணம் எதையும் சந்திக்க அணியமாகிறார். 1993 சனவரி 16 காலை 6.30 மணிக்கு இந்தியக் கப்பற்படை பீரங்கிக் குண்டுகளால் கிட்டுவின் கப்பலைத் தாக்குகிறது. சிவலிங்க கேசவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரு மாலுமிகளையும் கடலில் குதித்துத் தப்பிக்கச் சொல்கிறார் கிட்டு.

கேணல் கிட்டுவுடன் லெப்ரினன் கேணல் குட்டிசிறி, லெப்ரினன் கேணல் மலரவன், கடற்புலிகளான கப்டன் குணசீலன், கப்டன் ஜீவா, லெப்ரினன் தூயவன், லெப்ரினன் நல்லவன், லெப்ரினன் அமுதன் ஆகியோர் வீரச் சாவைத் தழுவிக் கொள்கின்றனர்.

கிட்டு ஒரு தனி மனித வரலாறு

நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும்

ஈழ விடுதலை வரலாற்றின்

ஒரு காலப் பதிவு.


-க.வே.அருள்

நாடு கடந்த தமிழீழ அரசின் அறிக்கை - ஒரு பார்வை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற ஈழ விடுதலைப் போராட்டம் இன்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஏறத்தாழ ஓரிலக்கத்திற்கும் மேலான மக்கள் மாண்டு போயுள்ளனர். இரண்டு இலக்கத்திற்கும் மேலான மக்கள் முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஈழம் முற்றுமுழுதாகச் சிங்களச் சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கிறது.

இன்று ஈழ மண்ணில் ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. சனநாயகவெளி முற்றிலுமாக அடைக்கப் பட்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தமது கடைசி மாவீரர் உரையில் ஈழ விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்களிடமே, அதுவும் குறிப்பாக இளைஞர்களிடமே உள்ளதெனக் குறிப்பிட்டார். தேசியத் தலைவரின் முன்னோக்கிய பார்வையையே இது காட்டுகிறது. தலைவர் சுட்டிக்காட்டும் கடமையின் ஒரு பகுதியை நிறைவேற்றும் முயற்சிதான் நாடு கடந்த அரசமைத்தலும் இவ்வறிக்கையும்.

நாடு கடந்த தமிழீழ அரசு:

நாடு கடந்த அரசாங்கம் (Transnational Goverment) என்பது புகலிட அரசாங்கத்திலிருந்து (Government of Ezile) முற்றிலும் வேறுபட்டது. புகலிட அரசாங்கம் என்பது ஏற்கனவே சொந்த நாட்டில் இயங்கி அகபுற அச்சுறுத்தல்கள் காரணமாக அங்கு இயங்க முடியாமல் நட்பு நாட்டில் அதன் ஏற்புடன் இயங்குவது.

நாடு கடந்த அரசு என்பது முற்றிலும் புதிய முயற்சி. இது இயங்குவதற்கு எந்தவொரு நாட்டினதும் இசைவும் ஏற்பும் தேவையில்லை. உலகெங்கும் பரவி வாழும் புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு இணங்கி இவ்வரசை செயல்படுத்த முடியும். இவ்வரசுக்கென்று தனி நிலப்பரப்பு எதுவும் தேவையில்லை. இவ்வரசின் கட்டமைப்பு பற்றியும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றியும் அறிக்கை விரிவாகப் பேசுகிறது.

அறிக்கை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான செயல்முறையையும், இலக்குகளையும் வரையறுத்துக் கொள்கிறது. நாடு கடந்த அரசாங்கத்தின் பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் வாக்காளர், வேட்பாளர்களின் தகுதிகள் ஆகியவை பற்றி விரிவாக விவரிக்கிறது. உலக அரங்கில் தான் செயல்படக் கூடிய தளத்தினையும் வரையறுத்துக் கொள்கிறது. இன்றைய சூழலில் உலகளவில் ஈழத்தமிழர்களுக்கான எதிர்நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தன் ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்துவதற்கான வழிவகைகளையும் ஆராய்கிறது. தனக்கு ஆதரவான

ஆற்றல்களாக கீழ்க்காணும் நான்கு தொகுதியினரை அடையாளம் காண்கிறது.

1. புலம் பெயர் ஈழத் தமிழர்கள்.

2. தாயகத்தில் வாழும் தமிழர்கள்

3.உலகெங்கும் பரந்து வாழும் பல தேசங்களினைச் சேர்ந்த தமிழ்ச் சமூகம்.

4. சர்வதேசச் சமூகம்.

இலக்கு:

அறிக்கை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலக்கினை எவ்வகை அய்யத்திற்கும் இடமின்றி முன்மொழிகிறது. ஈழத் தமிழர் தேசத்தின் நியாயமான அரசியல் அபிலாசைகளினை வென்றெடுக்க அயராது உழைப்பதே இதன் அடிப்படை இலக்கு என குறிப்பிடுகின்றது.

வழிகாட்டிக் கோட்பாடு:

அறிக்கை ஒன்பது வகையான வழிகாட்டிக் கோட்பாடுகளை விரிவாக விளக்குகிறது. அதன் முதன்மைக் கோட்பாடாகச் “சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை வென் றெடுப்பதில் விசுவாசமான உறுதிப் பாட்டைக் கொண்டிருத்தல்”” எனக் குறிப்பிடுகிறது. “தமிழீழ அரசு மதச் சார்பற்ற அரசாக அமையும்” என்பது அதன் இரண்டாவது கோட்பாடு. மற்றொரு கோட்பாடு “நாடு கடந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தக் குற்றங்கள் புரிந்தவர்கள் விசாரணைக்குட்படுத்தப் பட்டுக் குற்றங்கள் இழைத்தோர் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது பற்றியும் ஈழக் குழந்தைகளின் கல்வி பற்றியும், ஈழ மக்களின் பொருளாதார, தொழில், சுகாதார மேம்பாடுகள் பற்றியும் வழிகாட்டிக் கோட்பாட்டில் பேசப்படுகின்றன.

முஸ்லீம் இன மக்களுடனான உறவுநிலைகள்:

இவ்வறிக்கையின் மிகவும் சிறப்பான உள்ளங்கவர் குறிப்பாக இருப்பது முஸ்லீம் மக்களைப் பற்றிய குறிப்பாகும். ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட ஒரு சோக நிகழ்வினுக்குக் கழுவாய் தேடிக் கொள்ளும் முயற்சியாக இது அமைந்துள்ளது. ஈழத் தமிழர்களை மத அடிப்படையில் பிரிப்பதில் சிங்கள அரசு பெற்ற வெற்றிதான் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியது. இந்நிகழ்வானது முஸ்லீம் மக்களின் மனங்களில் இன்றுவரை ஆறாத வடுவாக அமைந்துவிட்டது. புலிகள் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்துவிட்ட போதிலும் முஸ்லீம் மக்களுடனான உறவு மேம்படவில்லை. இவ்வறிக்கை அதைத் தீர்ப்பதற்குப் பெரிதும் உதவுமென நம்பலாம்.“தமிழீழ அரசு அமையும் போது முஸ்லீம் மக்களின் கூட்டுப் பிரதிநிதித்து வத்தினை அங்கீகரிப்பதற்கும் ஏதுவான வலுவான அரசியலமைப்பு மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளினை உறுதி செய்து கொள்வது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொறுப்பாகும்”” என அறிக்கை உறுதியளிக்கிறது. அது இன்னொரு படி மேலே சென்று “விரும்பும் போது பிரிந்து சென்று தனியாக வாழும் சுயநிர்ணய உரிமை முஸ்லீம் மக்களுக்கும் உரியது என்பது ஏற்றுக்கொள்ளப்படும்” என அழுத்தம் திருத்தமாக அறிவிக்கிறது. இந்த அறிவிப்பானது எதிரிகளின் பொய்ப் பரப்புரையை உறுதியாக முடிவுக்குக் கொண்டு வரும் என நம்பலாம். இது முஸ்லீம் மக்களிடையே உள்ள தயக்கங் களையும் அச்சங்களையும் போக்கித் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அவர்களையும் இணைக்கும் என்பதில் அய்யமில்லை.

இவ்வாறு இவ்வறிக்கை பல்வேறு நல்ல வரவேற்கக்கூடிய அறிவிப்புகளைப் பெற்றிருக்கிறது. அறிக்கையில் கூறப் பட்டவை அனைத்தும் நடைமுறைக்கு வர புலம்பெயர் தமிழர்கள் உழைக்க வேண்டும். அறிக்கை குறித்து மனந்திறந்த விவாதங்களை மேற்கொள்ள வேண்டும். மாவீரர்களின் கனவு நனவாக அனைவரும் உழைக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் போராட்டத் திற்கு நாம் என்றும் துணை நிற்போம் என உறுதி கூறுவோமாக!

- தகப்பன் பிள்ளை

Wednesday, March 3, 2010

தமிழரின் உணர்வின்மையும் உட்பகையும்

01. கோவையில் Manchester Towers என்ற அடுக்ககம் ஒன்று உண்டு.. அன்கு வாழ்பவர்கள், சில உயர்வருவாய் தமிழர்களும் பல பிறமாநித்தவர்களும்... கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் வாக்களித்த குடியிருப்புவாசிகள் 5-6 பேர் மட்டுமே.. ஆனால், வாக்குரிமை உடையவர்கள் சுமார் 250பேர்..

மேலும் மாநகராட்சியிலிருந்து சுற்றுப்புற/சாக்கடை பராமரிப்புக்கும் கட்டுமாணத்திற்கும் பணியாளர்கள் வந்தால், “நாங்களே தரமாகச் செய்துவிடுகிறோம்; வேண்டாம் எனக் கூறி திருப்பியனுப்பி விடுகின்றனர். இது போன்ற “பொருள்மிகு அயலவர் இறையாண்மை”, சென்னை,கோவை போன்ற நகரங்களில்.. தமிழரின் உணர்வின்மையினாலும் உட்பகையினாலும் கோலோச்சுகிறது....

ஏறத்தாழ 20ஆண்டுகட்கு முன், சென்னை போன்ற பெருநகரங்களை (மத்திய நேரடி ஆட்சிக்குட்பட்ட) யூனியன் பிரதேசமாக்க அமைச்சர் அருண்சிங், தம் டூன் பள்ளித் தோழர் பிரதமர் ராஜீவுக்கு கூறிய

ஆலோசனைகள்.. மேற்குறித்த சூழல்கள் காரணமாக நடந்தேறிவிடக்கூடாது.

-----அகமத் கனி